இந்திய யாத்ரீகர்களை சந்திக்க, துாதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி, பின், மறுத்த பாகிஸ்தானுக்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சீக்கிய மதத்தினரின் புனித தலமாக கருதப்படும், பாகிஸ்தானில் உள்ள நன்கனா சாகிப் குருத்வாரா மற்றும் சச்சா சவுதா குருத்வாராவிற்கு, இந்தியாவிலிருந்து சென்ற யாத்ரீகர்களை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க சென்றனர்.
இதற்கு, முதலில் அனுமதி வழங்கிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், பின் அனுமதி மறுத்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: யாத்ரீகர்களை சந்திக்க, துாதரக அதிகாரிகளுக்கு முதலில் அனுமதி வழங்கிய, பாக்., அரசு, பின், அதை ரத்து செய்ததுடன், அதிகாரிகளை துன்புறுத்தியுள்ளது.
இதனால், துாதரக அதிகாரிகள், தங்கள் கடமையை நிறைவேற்ற முடியாமல் திரும்பி விட்டனர். இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளை, பாக்., ஆதரிக்கிறது. இந்திய யாத்ரீகர்களிடம், சிலர், காலிஸ்தான் ஆதரவு கொடியை காட்டிஉள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.