மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று காரசாரமான விவாதத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது அமர்வு முதல்வர் தி. சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது புதிய ஆண்டிற்கான அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டது. அதன் ஒரு அங்கமாக இவ்வாண்டிற்கான நிலையியற் குழுக்கள் அமைப்பது தொடர்பாக முதல்வரினால் சபையில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் எழுத்த ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவர் சென்ற வருடம் அமைக்கப்பட்ட குழுக்கள் கொரொனா தொற்று காரணமாக பலமாதங்களாக செயற்பட முடியாத நிலையேற்பட்டது. எனவே அக்குழுக்களையே இம்முறை புதிப்பிக்க வேண்டுமென்ற முன்மொழிவொன்றை முன்வைத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் இந்த முன்மொழிவினை வாக்களிப்பிற்கு விடுவதாக கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உள்ளூராட்சி சட்ட விதிமுறைகளுக்கு முரணானது எனவும் குழுவை புதிதாக அமையுங்கள் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்து வாதபிரதி வாதங்களில் ஈடுபட்டனர்.
இதனை மேற்கொள்வது ஐனநாயக விரோத செயல் என்பதுடன் இதனை மேற்கொள்ளாமல் தயவு செய்து குழுக்களை புதிதாக தெரிவுசெய்யுங்கள், நீங்களே குழுக்களை பிரேரியுங்கள், முதல்வரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கமைய செயற்பட வேண்டாமென மீண்டும் மீண்டும் சபையில் கோரிக்கை விடுத்ததுடன். குறித்த விடயம் தொடர்பில் தெளிவான விளக்கமொன்றினை ஆணையாளர் வழங்கவேண்டுமென எதிர்கட்சிகள் கோரிக்க விடுத்த நிலையில், ஆணையாளர் விளக்கமளிக்கையில் சபை அங்கீகரித்தால் அதே குழுக்களை மீண்டும் இயங்கஎவைக்க முடியுமென தெரிவித்ததையடுத்து வாக்களிப்புக்கு விடப்பட்டது.
இதன்பிற்பாடு இச்செயற்பாடு ஐனநாயகத்திற்கு முரணானது என எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்திருந்தனர். வாக்களிப்பில் அதே குழுக்கள் இயங்குவதற்கு சபை அங்கீகாரம் வழங்கியது.