யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து மாங்குளம் நகர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட கோர விபத்தில் பேருந்து சாரதியும் பயணி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை மோதி தள்ளி வீதியின் அருகில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பயணி ஒருவரும், திடீர் உடல் நல குறைவால் பேருந்து சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 3.10 மணியளவில் மாங்குளம் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதிக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சம்பவ இடத்திலிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்
இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் காயமடைந்ததுடன், பேருந்து மற்றும், வீதியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், முச்சக்கர வண்டி என்பனவும் சேதமடைந்துள்ளது
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த பயணி மற்றும் உடல் நலம் குறைவுற்றிருந்த பேரூந்துச் சாரதி ஆகியோர் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.