பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை திரிப்தி ஷங்த்தார், தந்தை தன்னை கொடுமைப்படுத்துவதாக வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
பதிவு: ஆகஸ்ட் 28, 2020 13:30 PM
மும்பை
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 19 வயதான திரிப்தி ஷங்க்தார். மும்பையில் தங்கி கும்கும் பாக்யா என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அவர் ஓயே இடியட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் திரிப்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது தந்தை ராம்ரதன் ஷங்க்தார் தன் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்ததாக கூறியுள்ளார்.
28 வயது நபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி தன்னை வற்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் அந்த வீடியோவில் திரிப்தி கூறியுள்ளார்.
ஒரு படம் மட்டுமே நடித்துள்ள நிலையில், தனது எதிர்காலத்தை வீணாக்குவதாக வேதனை தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவாக இருக்கும் தனது தாய் மற்றும் தம்பியையும் தந்தை மிரட்டுவதாக கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதேபோல், திரிப்தியின் தாயாரும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமான நாளில் இருந்து கணவர் கொடுமைபடுத்துவதாக கூறியுள்ளார். தயுவு செய்து தங்களுக்கு உதவுமாறு இருவரும் அந்த வீடியோவில் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய மூவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களுக்கு பரேலி போலீசார் உதவி செய்வதாகவும், திரிப்தியின் மேலாளர் கூறியுள்ளார்.
மனைவி மற்றும் மகளின் புகார் குறித்து ராம்ரதன் ஷங்க்தார் இடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். தந்தை கொடுமைபடுத்துவதாக நடிகை திரிப்தி வெளியிட்ட புகார், இந்தி சின்னத்திரை ரசிர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.