நீதிமன்ற உத்தரவிற்கமைவாக வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட களுபோவில வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியை நுகேகொட மாவட்ட நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
கணவரின் தாக்குதலிற்கிலக்கான இந்த இளம்பெண் கொழும்பு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கமைய, வைத்திய பரிசோதனைகளிற்காக களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனைக்கு சென்ற இளம்பெண்ணுடன் சென்ற தாதியையும், இளம்பெண்ணின் தாயையும் வைத்திய அதிகாரி தனது அறைக்கு வெளியில் நிற்க சொல்லி விட்டு, சோதனை எனும் பெயரில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை, ஜயவர்தனபுர வைத்தியசாலை பொலிஸில் இளம்பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் வைத்திய அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நுகேகொட மாவட்ட நீதிவான் வசந்த குமார ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் வைத்திய அதிகாரியை விடுவித்துள்ளார்.