யாழ்ப்பாணத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்டுள்ளனர். இந்த பரபரப்பு சம்பவம் நேற்று முன்தினம் (18) அல்லைப்பிட்டியில் இடம்பெற்றது.
அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வீதியால் வந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் இதை அவதானித்தார். இதையடுத்து அங்கு வேறு சிலரும் கூடி, அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு அறிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நோயாளர் காவு வண்டி, இளைஞனை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞன் கழுத்தறுக்கப்பட்டிருந்த இடத்தில் அவரது துவிச்சக்கர வண்டி, செருப்பு என்பன வேறுவேறு திசைகளில் காணப்பட்டன.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இது கொலை முயற்சியா அல்லது தற்கொலை முயற்சியா என்பதை இன்னும் உறுதிசெய்யவில்லையென அவர்கள் தெரிவித்தனர்.