யாழ் மாவட்டத்தில் தற்போது 5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு தொடர்ச்சியாக 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகள் இரண்டு தடவைகளில் அந்தந்த பிரதேச செயலகத்தினூடாக வழங்கி வருகின்றோம்.
அரசாங்கத்தின் ஊடாக குறித்த நிதியினை பெற்று அதற்குரிய வேலைத்திட்டத்திளை முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும் பொதுமக்கள் இந்த நிலைமையில் தொற்று மேலும் பரவாது இருப்பதற்கு மக்களின் அவதானமான செயற்பாடு மிகவும் முக்கியமானது.
அத்தோடு மக்கள் குறித்த விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் இந்த நிலைமை மேலும் தீவிரமடையாது இருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமானது.
அத்தோடு சுகாதார பிரிவு, மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டியது முக்கியமானது.
போக்குவரத்தில் அநாவசியமான போக்குவரத்தை தவிர்த்து தேவையான விடயங்களுக்கு மட்டும் பயணங்களை மேற்கொண்டு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.