பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உடல்நிலை மேம்படுவது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் படமான ‘ஆர்ஆர்ஆர்’ (இரத்தம் ரணம் ரெளத்திரம்) படத்தில் ராம் சரண் தேஜா நடித்து வருகிறார். இவருடன் ஜூனியர் என்டிஆர், இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட், ஸ்ரேயா உட்பட பலர் நடித்து வருகின்றனர். ‘பாகுபலி’ படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.